Monday, 28 December 2020

ஆதிரை பதிகம்

 ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !


 ஆதிரை பதிகம்


 திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.


மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.


இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.


"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்

போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே"


என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.


தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!


இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


பாடல் எண் : 01

முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே

வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்

அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.


பாடல் எண் : 02

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.


பாடல் எண் : 03

வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்

சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்

சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.


பாடல் எண் : 04

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்

பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்

வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்

அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும் படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.


பாடல் எண் : 05

நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்

கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து

அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.


பாடல் எண் : 06

விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்

தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்

எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு

அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.


பாடல் எண் : 07

செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்

இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்

அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.


பாடல் எண் : 08

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல

வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்ல

பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ

அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.


பாடல் எண் : 09

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்

இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்

அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும்.


பாடல் எண் : 10

பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்த

சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து

ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்

ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.


தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!

இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

Sunday, 20 December 2020

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 16:


 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 16:


நூற்பயன் :


"அஞ்சுபுலனடக்கி யானென்பததற்றறிந்து

கஞ்சிநகர் வாழும் காமாக்ஷியம்மையிரு

கஞ்சமலர்ப்பதங்கள் கண்டு மனமகிழ்ந்து

தஞ்சமெனவருட்பாவை நிதம் பாடி

கொஞ்சுமடியார்க்குத் தேவியருள் சேரும்

பஞ்சவினை தீரும் பார்புகழும் வாழ்வுவரும்

மிஞ்சுமழகுவரும் மேலான கல்விவரும்

பஞ்சநிதி வருமே காணேலோர் எம்பாவாய்'


விளக்கம் :


ஐந்து புலன்களையுமடக்கி, நானெனும் அஹங்காரத்தை விட்டொழித்து, காஞ்சிபுரத்தில் வாழும் ஶ்ரீகாமாக்ஷியம்மை இரு தாளை மட்டுமே கண்டு மனம் நிறைந்து மகிழ்ந்து, தேவி பாதமே தஞ்சமெனும் உள்ளம் நினைந்து, காமாக்ஷியருட்பாவையை நிதம் பாடி, கொஞ்சுமடியார்க்குத் ஶ்ரீகாமாக்ஷி தேவி அருள் பூரணமாய்ச் சேரும். வினைகளெல்லாம் தீர்ந்தொழியும். பாரில் உள்ள மக்கள் புகழும்படியான வாழ்வு வரும். அனைத்திலும் சிறந்த அழகு வரும். மேலான சிறந்த கல்வியும் உண்டாம்!! சங்கநிதி முதற்கொண்ட நிதிகள் தாமே வந்தடையும்!! இவையெல்லாவற்றுக்கும் மேலாக முக்தியும் உண்டாம்!!


ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை நிறைந்தது!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:



"ஊருமே மெய்யல்ல உற்றாரும் மெய்யல்ல

பேருமே மெய்யல்ல பெண்டீரும் மெய்யல்ல

நீருமே மெய்யல்ல நும்மக்கள் மெய்யல்ல

பாருமே மெய்யல்ல பலநிதியும் மெய்யல்ல

கோரும் நிதிஈயும் கற்பகமே தஞ்சமென

சாரும் அடியார்க்குத் தாயாகி காமாக்ஷி

யாரும் அறியாது ஆண்டருளுந் தன்மையினால்

நேருஞ்சுகமொன்றே மெய்யேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


இவ்வுலகம் மெய்யல்ல!! ஸித்தாந்தங்களில் அத்விதீயம் என்பது உயர்ந்த ஸித்தாந்தம் என்பது ஶ்ரீசங்கரபகவத் பாதாள் காண்பித்த வழி!! அத்விதீயமான மோக்ஷத்தை அனுபவத்திற்குக் கொண்டு வரும் வழி சாக்த தந்த்ரங்களே!!


ப்ரஹ்மவித்யோபாஸனையினால் ஆத்மவிசாரம் செய்து, வாஸனாதிகளை தொலைத்து, ஞானமடைந்து, முக்தியடைவதென்பது அனைவர்க்குந் துர்லபம்!! 


அத்வைத மோக்ஷத்தை துல்யமாக அனுபவத்திற்கு கொண்டு வரும் வழியை சாக்த தந்த்ரங்கள் கூறுகின்றன. ஏனைய சமய உபாஸனைகள் த்வைத பாவத்தைக் கொண்டிருப்பினும், தசமஹாவித்யா தந்த்ரங்களாயினும் தக்ஷிணகாலி முதல் கமலாத்மிகா வரையிலும் அத்தனை குல உபாஸனையிலும் இறுதி நிலை அத்வைத முக்தியே!!


சாக்தத்தின் நிலை மூர்த்தி பேதத்தினை பொறுத்து மாறாது என்பது சாக்தத்தின் தனிச்சிறப்பு!! உபாஸிக்கும் மூர்த்தம் காமாக்ஷியாயினும், காளியாயினும், தூமாவதியாயினும், துர்கையாயினும், சின்னமஸ்தாவாயினும் இறுதி நிலை அத்தேவதையுடன் ஒன்றிவிடுவதே!!


ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமா முழுக்க முழுக்க அத்வைத நிலையைக் கூறுவதைக் காண்க!!


சாக்தத்திற்கும் அத்வைதத்திற்கும் ச்ருஷ்ட்டியில் வேறுபாடு உண்டே தவிர்த்து லயத்தில் வேறுபாடு இல்லை!! இறுதி நிலையை இரண்டும் ஒன்றாகவே கூறுகின்றது!!


ஶ்ரீகாமாக்ஷி தாஸர் அதையே இங்கு கூறுகின்றார்!!


இவ்வுலகில் அனைத்தும் மாயைத் திரையாலே மூடப்பெற்று விளங்குகின்றது. ப்ரஹ்மாதி மூர்த்தங்களும் மாயையினாலே ச்ருஷ்ட்யாதி கார்யங்களைச் செய்கின்றனர் எனில் அவர்களும் நிலையில்லாதவர்களே!!


மாயையால் பொய்யானதால், இவ்வுலகம் மெய்யல்ல!! பொய்யே!!


உற்றாரும் மெய்யல்ல!! பொய்யே!! கணந்தோறும் மாறக்கூடிய உலகில் சொந்தங்களும் மாறுகின்றன அல்லவா!!


பேருமே மெய்யல்ல!! இறந்த பின்னர் இப்பெயரும் அழகிறது அல்லவா!!? பேரும் பொய்யே!!


பெண்டீரும் மெய்யல்ல!! கணவன் மனைவி எனும் பந்தமும் இறப்பு வரையே!! அதன் பின் அதுவும் பொய்யே!!


நாமும் மெய்யல்ல!! இவ்வடலாயினும், மனதாயினும் அனைத்தும் அழிந்துவிடுவதால் நாமும் மெய்யல்ல!! பொய்யே!!


நமது குழந்தைகளும் இந்த பிறவியுடன் தொடர்பு முறிந்துவிடுவதால் அவர்களும் மெய்யல்ல!! பொய்யே!!


இவ்வுலகும் மெய்யல்ல!! செல்வங்களனைத்தும் மெய்யல்ல!! பொய்யே!!


பின்.எது மெய்!!?


கேட்கக்கூடிய அனைத்தும் அளித்து காஞ்சிநகர் வாழும் காமக்கோட்டமுறையும் கற்பகவல்லியாம் ஶ்ரீகாமாக்ஷி பராம்பாளின் திருவடியே தஞ்சம் தஞ்சமென்று வேதங்கள் அம்பாளின் பாதத்தில் விழுந்ததைப் போல

"துர்காந் தேவீஹும் சரணமஹம் ப்ரபத்யே!" என்றும் "தாம் பத்மினீம் ஈம் சரணமஹம் ப்ரபத்யே!" என்று காமாக்ஷி பாதத்தினை சரணமடையும் பக்தருக்கு தானே தாயாகி விளங்குவாள் அம்பாள்.


அங்ஙனம் ஶ்ரீமாதாவான பராசக்தி பேதித்து நமை வளர்த்தெடுக்கும் பெய்வளையாகி, நம் ஆணவாதி மலங்களையெல்லாம் ஒழித்து, நம்மை சுத்தனாக்கிப், பின் முக்தனாக்கி, ஜீவன் முக்தியையும் வழங்கி அருள்கிறாள். அத்தகைய கருணையுடன் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அளிக்கும் முக்தியொன்றே மெய் என்பதை உணர்வீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 14:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 14:



"பெருங்காரியம் போல் பிறந்தீர் உலகில்

 அருங்காரியம் நீர் புரிந்ததென்ன சொல்வீர்

குரங்காய்ப பிறந்தீர் கிடந்தீர் தவழ்ந்தீர்

பெருங்காண் நடந்தீர் தளர்ந்து பிணமானீர்

ஒருங்கே வருவீர் நீர் உய்யும் வகை கேளீர்

சிரங்கை குவித்தம்மை சீர் பாடித் தாளை

நெருங்கி மலர் தூவி நித்த நிலை நாடி

இருங்கோள அருள்வருமே தாலேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"ஏதோ சாதித்து விட்டதைப் போல இவ்வுலகிலே பிறந்தோம்!! உலகிலே பிறந்து நாம் செய்த சிறந்த காரியம் என்ன!!?


பிறந்தோம், தவழ்ந்தோம், வளர்ந்தோம், படித்தோம், மணந்தோம், பிள்ளை பெற்றோம், பின் அவற்றை வளர்த்தோம், இறுதியில் மாண்டோம்!!


விலங்கினங்களும், பறவைகளும் கூட இக்காரியத்தைச் செய்கின்றனவே!! இவைகளுக்கு மாறாக நாம் மனிதராய்ப் பிறந்து இவ்வுலகில் சாதித்தது என்ன!!?


வாணாள் முழுதும் வீணாகியே போகிறதல்லவா!!? இவ்வாழ்நாளை பயனுறும்படி செய்ய வழியொன்று உண்டாகில், அது ஜகதம்பிகையாகிய பராசக்தி காமாக்ஷியைக் கண்டு வணங்குவதேயாம்!!


தேவியின்.ஆலயமாம் காஞ்சிப்பதிக்குச் சென்று, ஶ்ரீராஜராஜேச்வரியான பகவதி காமேச்வரியை, தலையின் மேல் கைகுவித்து,


அம்மையின பெருமை தனைப் பாடிப் புகழ்ந்து, இருதிருவடிகளை வணங்கி, அம்பாள் பாதத்திலே மலரைத் தூவி, முக்தி நிலையைப் பாடி,


அவளின் திருவடியிணையை மறவாதிருந்தால் முக்தியும் கைமேலாம் என்பநை உணரவீராக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:



"தாய்க்குச் சுமையாய் தலைகீழாய் வந்துதித்து

பாய்க்குட்கிடந்தழுது பாழுலகிலே வளர்ந்து

ஏய்க்குந்திறனறிந்து எப்பொருளும் தான் கவர்ந்து

பேய்க்கு நிகராகும் பேர்களிடேயே சொரிந்து

நாய்க்குங் கடையாகி நாடு நாடாய் அலைந்து

நோய்க்கே இரையாகும் பொய்வாழ்வு தாயேயுன்

சேய்க்கு வரலாமோ வாராது காத்தருள்வாய்

தாய்க்கும் பெருந்தாயாய் வந்தேலோர் எம்பாவாய்"


விளக்கம் :


"பூமியில் பிறக்கும் பொழுது கொடுமையான வேதனையை தாயாருக்கு அளித்துக்கொண்டே தலைகீழாகவே பூமியில்  பிறந்து,


பாயில் கிடந்து, பல சேஷ்டைகளைச் செய்து அழுது, பாழான இவ்வுலகிலே வளர்ந்து,


அடுத்தவரை ஏய்க்கும் திறனைக் கண்டு அறிந்து, பொருளீட்டுவதற்காக பல மாறுபாடுள்ள தவறான வழிகளையும் கொண்டு,


பேய்க்குச் சமமான மக்களுடன் வீணே பழகி, நல்லோரைப் போல் நடமிடும் தீயோரைக் கண்டு, மயங்கி, அவர் பின்னே சென்று, மீறாத் துயருற்று,


நாயை விடவும் கடையனாகி, ஊர்கள் தோறும் அலைந்து, வருந்திப்


பின் பாழான நோய் ஏற்பட்டு, இவ்வாழ்வு நோயினாலே கரையும் வண்ணம் துக்கமும் ஏற்ப்பட்டு, அதன் விளைவாய் மரணமும் தோன்றும் படி


இத்தகைய துயரமும், பராசக்தியான அம்பிகையே, இத்தகைய பொய் வாழ்வு உன் அடியார்களுக்கு வரலாமா!!?


உன் பிள்ளைகளான எங்களை இத்தகைய கொடுமையான பொய்வாழ்வு வாராமல் காத்தருள்வாய் அம்மா!!


தாய்க்கெல்லாம தாயாய் விளங்கும் பெருந்தாயே!! தயாபரியே!! உமையே!!


தாயினும் நல்லாள் என்பது அம்பிகை நாமம்!!! ஸஹஸ்ரநாமமும் அம்பாளை ஶ்ரீமாதா எனக்கூறுவதைக் காண்க!!


மேலும் அயி, விதாத்ரி, ப்ரஸவித்ரி, அம்பா, அம்பிகா, ஜனனி, மாதா என மறுபடி மறுபடி கூறுவதைக் காண்க!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:



"பொருள் நிறைவோ தேட இங்கு புறப்பட்டு வந்தீர்

அருநிறைவைத் தேடவோ அங்கிருந்து வந்தீர்

இருநிறையும் ஏழையரே உய்யும் வகை கேளீர்

கருணைவடிவாகியொரு காஞ்சியெனும் ஊரில்

அருணர் சதகோடி என ஜோதியொளி வீசும்

சரணுடைய தாயொருத்தி தஞ்சமென்றோர்க்குத்

அருநிறைவும் ஆங்கே பொருநிறைவும் சேர்த்து

தருமணியாய் காத்துள்ளாள காணேலோரெம்பாவாய்"


விளக்கம் :


"யத்ராஸ்தி போக நச தத்ர மோக்ஷ:

யத்ராஸ்தி மோக்ஷ நச தத்ர போக:

ஶ்ரீஸுந்தரி ஸாதக புங்கவானாம் போகஸ்ச மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ!!"


என்பது தந்த்ர வசனம்!! அம்பாளை உபாஸிக்கும் பக்தர்க்கு அருளும் பொருளும் நிறைந்தே கிடைக்கும் என்பது அவள் கருணை!!


பொருள் நிறைவைத் தேடி அம்பிகைத் தொழுபவர் பலர் உண்டு!! ஶ்ரீமதாச்சார்யாளும் அம்பாளைக் கூறும் போது, அஞ்ஞானத்தை ஒழிப்பவள், கல்வியறிவை அளிப்பவள், என்றெல்லாம் கூறிவிட்டுப் பின்னரே முக்தியை அளிப்பவள் அம்பாள் என்கிறார்!!


போகாதிகளை அளித்து, வாழ்வில் நிறைவளித்துப் பின் முக்தியளிப்பவள் ஶ்ரீபராசக்தி!!


அது போல் பொருளை வேண்டினும், பொருட்செல்வம் அளிப்பாள். அருளை வேண்டினும் அருட்செல்வத்தையும் அளித்தருள்வாள் அம்மை!!


அஞ்ஞானம் எனும் இருளால் மூடப்பெற்று விளங்கும் நம்மை விழாமல் காத்தருள்பவள் அன்னை பராசக்தி. நாம் உய்யும் வகை என்னவெனில்,


கஞ்சிநகர் தனிலே, காமபீடத்திலே, கருணை வடிவாகியமர்ந்து, ஆயிரம் கோடி சூரியன்களைப் போல ஒளி பொருந்திய திருமேனியை உடைய ஜகன்மாதாவை சரணமடைவது தான்!!


அப்படி சரணமடைந்தவருக்கு, தாயாய் விளங்கும் பராசக்தி தஞ்சமென்றடைந்தோருக்கு அருள் நிறைவை வழங்கி அருள்பவள்!!


தண்ணருளை பூரணமாய் வழங்கியருள் தயாபரியான அம்பிகை, கீழான பொருட்செல்வத்தை நாம் விரும்பினும் அதையும் அளித்தருளும் பூரணி தயாபரி!! 


இவ்விரண்டையும் அளிக்கும் கருணையுள்ளத்தோடு கஞ்சிநகரில் காமபீடத்திலே ஜகன்மாதா காத்திருக்கிறாள் தன்.குழந்தைகள் தன்னிடத்திலே வந்து சேர்வதற்காக!!


அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி அமபாளை ஸதா ஸ்மரிப்போமாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:



"வாணாட்சி காணண்னை மன்னுலகில் லீலையாய்

காணாட்சி செய்யும் அரியாசனத்தில் அமர்ந்து

தானாட்சி செய்யும் தென்மதுரை மாநகரில்

மீனாட்சியாய் வந்த மாதா மனோன்மணியை

தானாட்சி செய்தும்மை பாழ்நரகில் வீழ்த்திடும்

ஊனாட்சி செய்யுமமது உள்ளத்தில் வைத்திட்டு

யானாட்சி செய்து மல ஆணவம் நீத்தீரேல்

வாண்ட்சி காணலாம் என்றேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"ஶ்ரீமந்நகர நாயிகையான பராசக்தி அனேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனி!! ஶ்ரீபுர மத்யத்தில் விளங்கும் காமலோசனாம்பாள், உலகங்களையெல்லாம் பரிபாலிக்கும் வண்ணம் ப்ரஹ்மாண்டங்களுக்கு மத்தியில் விளங்கும் மஹாமேருவின் உச்சியிலும் விளங்கி நிற்பாள். ஆதிசக்தியான ஶ்ரீகாமாக்ஷி தேவி உயிர்களிடத்து அபிமானம் கொண்டு கரும்புவில்லும், மலர்க்கணையும் ஏந்தி மலயத்வஜபாண்டியனுக்கு மூன்று வயது மகவாய் அயோநிஜையாகத் தோன்றினாள்!!


மலயத்வஜனுக்கு மகவாய் அவதரிக்கும் முன்பே ஶ்ரீமீநாக்ஷி தேவியை இந்த்ரன் மரகத ரத்னத்தாலான சிலாரூபமாக ப்ரதிஷ்டித்துவிட்டதாக புராணங்கள் கூறும்!! ஆயினும் த்ரிபுரஸுந்தரியான ஶ்ரீமீநாக்ஷி மீள மலயத்வஜனுக்கு மகவாய்த் தோன்றி நின்றாள்!!


வாணாட்சியை விட்டுவிட்டு, ஶ்ரீகாமாக்ஷி தேவி மண்ணுலகை ஆட்சி செய்ய ஶ்ரீமீநாக்ஷியாய்த் தோன்றினாள். பாண்டிய வம்சத்து அரியணையில் அமர்ந்து, பாண்டிய குலத்திற்கே நீங்காத புகழளித்தாள். ஶ்ரீசக்ரத்தின் வடிவில் விளங்கும் தென்மதுராபுரியிலே ஶ்ரீபுரத்தில் ஜ்வலிப்பது போலே அம்பாள் அரசாட்சி செய்தாள்.


அவ்வாறு விளங்கிய தேவி "மஹா மனோன்மனி" பீடமாம் மதுரையில் ஶ்ரீசக்ர பிந்துவில் கொலுவீற்றிருந்து அருள்கிறாள்.


அப்படி மீநாக்ஷியாய் விளங்கும் காமாக்ஷியை, பஞ்சேந்த்ரியங்களாலும் அல்லலுற்று புலன்கள் இழுக்கும் வழியில் சென்று மீளாத் துயரை அடைந்து விடாமல், ஹ்ருதயத்தாமரையிலே என்றும் அவளை வைத்து பூஜிப்பீர்களாக!!


ஶ்ரீமீனலோசனையான அம்பாள் கொலுவீற்றிருந்து அருளும் ஹ்ருதயத்திலே பாபங்கள் நெருங்காது!! ஆணவாதி மலங்கள் அழிந்து படும்!! ஆதிசக்தியான இவள் வடிவை த்யானித்த பொழுதில் முக்தியும் சித்திக்கும்!!


அப்படி முக்தியடைந்து இன்புறுவீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 10:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 10:



"போதனை போதாத புல்லறிவாளறன்றோ

சோதனை செய்திடும் தெய்வமென்பார் இவ்வுலகில்

வாதனை தீர்க்கவந்த மாகருணை மெய்ப்பொருளோ

வேதனை செய்யும் இங்கு விட்டிடுவீர் இம்மடமை

பார்தனிற் பக்தர் தமை காக்க வந்த கற்பகத்தை

நாதனைப் பாகமதில் வைத்திட்ட மாதுமையை

மாதினை மார்பணிந்த செம்மாலின் பின்னாளை

மேதினியில் மெய்மறந்து பாடேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"கஷ்டகாலம் நேரும் போது தெய்வம் சோதிக்கிறது என்று கூறுவது உலக வழக்கம்!! நாம் செய்து கர்மவினைகளே நமக்கு நன்மை தீமைகளாகி வருகின்றதே அன்றி, தெய்வம் தனியாக சோதிப்பதில்லை!


சாஸ்த்ரங்களை உணராதவரன்றோ தெய்வம் சோதிக்கிறது எனக்கூறுவர் இவ்வுலகில்!! தெய்வத்திற்க்கெல்லாம் தெய்வமாகி தாயாய் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி என்றும் தன் குழந்தைகளை  சோதிப்பது இல்லை. தன் மகவிற்கு வரும் கஷ்டங்களைக் குறைத்து, கர்மவினைகளை ஒழித்து அருள்பவள் பராசக்தி!!


ப்ரஹ்மதேவர் கைவிரல்களால் எழுதிய தலை எழுத்தை, ஶ்ரீகாமாக்ஷி தனது கால் விரல்களால் அழித்து விடுவாளாம்!! எனில் அனைவர்க்குமன்று!! அஸஞ்சலமான பக்தியேடையோர்க்கே!! ஒரு கணம் கூட நீங்காத தேவி ஸ்மரணை உள்ளவருக்கு விதியும் மாறும்!! காலமும் அவன் கட்டுக்குள் வரும்!! அவன் அடைய முடியாதது இவ்வையத்திலே ஒன்றுமில்லை!!


இத்தகைய மாகருணை வாய்ந்த அம்பிகையை ஸதா ஹ்ருதயத்தில் பாவிப்பவருக்கு, ப்ரளயகாலாக்னியும் கற்பூர நீராஜனம் செய்யும் என்பார் சங்கரர்.


பிறவி எனும் மாபெரும் வ்யாதியை தீர்க்க வந்த கருணை மிகுந்த மெய்ப்பொருளானவள் ஶ்ரீபராசக்தி.


அவளா துயரமளிப்பாள்!! அவளே துயரங்களை அழித்தொழிப்பாள்!! அம்பிகை சோதிப்பாள் எனும் எண்ணத்தை விட்டொழித்து விடுவீர்!!


இவ்வுலகிலே பக்தர்களை காக்க வந்தருள் புரியும் கல்பகவல்லியை, 


சிவனாருக்கு தன்னுடைய ஒரு பாகத்தை அளித்தருளிய உமா தேவியை (ப்ரஹ்மாண்ட புராணம் ஈசன் தவமிருந்து அம்பிகையின் பாகம் பெற்றதைக் கூறும்!!)


மஹாலக்ஷ்மியை மார்பிலணிந்த திருமாலின் தங்கையாகத் தோன்றிய பராம்பிகையை (வாஸ்தவத்தில் நாராயணனுக்கும் தாயாராய் இருந்தாலும், தங்கையாகவும் அவதரித்தாள் அம்பாள்!!)


ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் மஹிமையை இம்மேதினியில் மெய்மறந்து பாடுவீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 9:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 9:



"பாடிடுவீர் பாடிப் பரவசத்தால் மெய்சிலிர்த்து

ஆடிடுவீர் ஆடி அடங்கியுளம் பூரித்துத்

தேடிடுவீர் தேடித் திருவடியை நுஞ்சிரமேற்

சூடிடுவீர் சூடிச் சுமங்கலையாம் தேவியருள்

நாடிடுவீர் நாடி நலம்பெறவே அன்பருடன்

கூடிடுவீர் கூடி நீர் பேரின்பங் கண்டீரேல்

காடும் ஓர் வீடாகும் காசினியில் நீர் வசிக்கும்

வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்"


விளக்கம் :


"அம்பாளின் புகழைப் உளங்குழைந்து பாடுவீர்!! அப்பரவசத்தால் மெய்சிலிர்த்து தனை மறந்து ஆடுவீர்!!


பக்தியின் முதல் நிலை இதுவே!! பரதேவதையின் புகழைக் கேட்டு மெய்மறந்து பாடி ஆடுவது!! 


பின் மனமடங்கி அம்பாளின் திருவடியை த்யானித்து, சிரஸில் அவள் திருவடி இருப்பதை ஸதா பாவித்திருப்பீர்!!


ரக்த சுக்ல மிச்ராத்மகமான ஶ்ரீபரதேவதை காமாக்ஷியின் திருவடியானது சிரஸின் மத்யத்திலே இருப்பதாக பாவிப்பது ஶ்ரீவித்யோபாஸக ஸம்ப்ரதாயம்!! 


தேவியின் திருவடியிலிருந்து பெருகும் அம்ருதத்தால் எழுபத்துரெண்டாயிரம் நாடிகளும் நனையப்பெற்று ஜீவன்முக்த நிலையை அடைந்திடுவீர் என்பதையே ஶ்ரீகாமாக்ஷி தாஸர் இங்கே கூறுகிறார்!!


ஸதா பரதேவதையின் திருவடியை சிந்தையில் நினைந்து, ஓங்காரியான அவளின் மஹாமந்த்ராதிகளை ஜபித்து, அவளருளைப் பெறும் வழியைத் தேடுவீர்!!


அத்தகைய அருளைப் பெறும் வண்ணம், அவள் புகழைப் பாடும் அன்பர் கூட்டத்துடன் கூடிடுவீர்!! ஸத்ஸங்கத்தில் திளைப்பீர் என்கிறார்!!


அம்பாளின் மஹிமையை நாமே உணர்ந்து அனுபவிப்பதைக் காட்டிலும், அவள் மேல் பக்தியுடன் இருக்கும் மற்றோருக்கு அதை உணர்த்தும்படி அவள் மஹிமைக் கூறுவதும், அவளின் பெருமையைக் கேட்பதும் அந்த இன்பமே தனி!! 


ஸர்வத்திற்கும் ஆதியான மஹாசக்தி ஶ்ரீலலிதை என்பதையும், கோடிக்கணக்கான த்ரிமூர்த்திகளையும், பலகோடி ப்ரஹ்மாண்டங்களையும் கண் இமைக்கும் நேரத்தில் உண்டாக்கி மறைக்கும் ஆதிசக்தி என்பதையும், அனைவரிடத்திலும் ஆத்மஸ்வரூபமாக விளங்குபவள் இவளொருத்தியே என்பதையும், ஸத்ய ஏக வஸ்துவான லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி தேவியைக் காட்டிலும் மற்றொன்று இல்லை எனும் உபநிஷத வாக்யங்களைக் கேட்கும் போது நெஞ்சம் விம்முகிறது அல்லவா!! 


காமாக்ஷி, லலிதா, மீனாக்ஷி, அபயாம்பிகே, சிவகாமஸுந்தரி, கமலாம்பிகே, மங்கலாம்பிகே என்று அவளின் நாமங்களைக் கேட்கும் போது "என் அம்மா இவோ" எனும் ஆனந்தத்துடன் கூடிய நிறைவு

ஏற்படுகிறதல்லவா!! அதுவே மஹதாநந்தம்!!


இப்படிப்பட்ட ஆனந்தம் ஏற்பட்டுவிடின் காடும் வீடாகும்!! ஜீவன்முக்தனுக்கு காடென்ன வீடென்ன !!?? அனைத்தும் ஶ்ரீகாமக்ஷியின் வாசஸ்தானம் தான்!!


ஶ்ரீமந்நகரநாயிகையான ஶ்ரீலலிதாம்பாள் மஹாராஜ தர்பாரில் மஹாத்ரிபுரஸுந்தரியாக ஸிம்ஹாஸனத்திலும் விளங்குவாள்!! ஸ்மசானத்தில் ஸதாசிவனான சவத்தின் மேல் கிளம்பும் தாமரையின் மீது ஸ்மசான ஷோடஷியாகவும் விளங்குவாள்!!


அதுபோல் காலிகா ரூபத்திலும் ஸ்மசானத்திலே மஹாகாலரின் ஹ்ருதயத்தில்  விளங்கும் பாதத்தைக் கொண்டு மஹாதக்ஷிணகாலியாகவும் விளங்குவாள்!! மஹாகைலாஸ நகரத்தில் ஸிம்ஹாஸனத்திலும் ஶ்ரீமஹாகாலியாக விளங்குவாள்!!


அம்பாளுக்கு எப்படி அனைத்தும் ஒன்றோ, அது போலவே உபாஸகர்க்கும்!! அனைத்தும் ஒன்றாகவே காண வேண்டும்!!


அப்படி ஶ்ரீகாமாக்ஷியை உபாஸிப்போர்க்கு காடும் வீடாகும், காசினியிலே இப்போது நீர் வசிக்கும் பெருவீடாகும்!!


தேவி உபாஸகனுடைய வீடே மணித்வீபம்!! பூஜையறையே ஶ்ரீசக்ரம்!! அமர்ந்துள்ள ஸ்தானமே பிந்து!! எதிரிலிருக்கும் தேவியின் விக்ரஹமோ அன்றி சித்ரபடமோ ஸாக்ஷாத் லலிதாம்பாள்!! இதுவே ஸத்யம்! ஸத்யம்!! ஸத்யம்!!!


இத்தகைய பக்குவத்தை அளித்து பரதேவதை முக்தியை அளிக்கட்டும்!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

Friday, 18 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 8:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 8:



"வேணும்பொழுதடியர் வேண்டுமவை ஈந்தருளி

தோணித்துறையிருந்து தோன்றாத்துணையாகி

வீண் இப் பிறவி அலை வேலைக் கடக்க அருள்

வாணிக்கும் நாரணிக்கும் மேலான பூரணியை

காணக் கவலை போம் கஞ்சக் கழலிரண்டும்

பேணப் பலநிதியாம் பேறு தரும் குங்குமத்தைப்

பூணப் பலநிதியாம் புண்ணியமாம் கண்ணியமாம்

காணப் புறப்படுமின் இன்றேலோர் எம்பாவாய்"


விளக்கம்:


"அடியார் வேண்டுவனவற்றையெல்லாம்  அவற்றை அளிப்பவள் பராசக்தி!!


அப்பராசக்தி உறையும் மஹாபீடமான ஶ்ரீகாமகோடி என்பதற்கு ஶ்ரீகாமாக்ஷி விலாஸம் கூறும் பொருளாவது!!


"தர்மம் அர்த்தம் காமம் இவற்றை மட்டும் விரும்பும் புபுக்ஷூவிற்கு இவைகளை அளித்து மோக்ஷத்தில் இச்சையுமளித்து, மோக்ஷத்தை அளிப்பதனாலும், தர்மார்த்த காமங்களில் இச்சையில்லாத முமுக்ஷுவிற்கு அவர்கள் விரும்பும் மோக்ஷத்தை நொடியில் அளிப்பதாலும், மோக்ஷானுக்ரஹ பராசக்தியாய் விளங்குவதாலும் அவள் உறையும் மஹாபீடமானது காமகோடி எனப்படும்!! காமத்தின் இறுதியான கைவல்ய முக்தியை மிகுந்த ப்ரயாசை இல்லாமலேயே வழங்கும் மஹாபீடமாதலின் இது காமகோடி!!"


உலகில் பிறந்த கணம் முதல் மரிக்கும் கணம் வரை தோன்றாத் துணையாகி விளங்குபவள் ஶ்ரீபராசக்தியான ஜகன்மாதா. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையாய் விளங்கும் ஆதிசக்தி இவள்.


வீணான இப்பிறவிக்கடலை கடக்க துணையாகி விளங்குபவள். வாணியாம் ஸரஸ்வதிக்கும், நாரணியாம் லக்ஷ்மிக்கும் மேலான பூரணியாகி விளங்குபவள்!!


ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் அம்பாளின் இருபுறங்களில் நின்று சாமரம் வீசுவதாக புராணங்களும் தந்த்ரங்களும் கூறும்!! ஸரஸ்வதி, லக்ஷ்மி எனும் இரு சக்திகளும் அம்பாள் ஒருத்தியே!! இவளே காளி, லக்ஷ்மி, ஸரஸ்வதி எனும் சக்திகளாகி விளங்குபவள். எனினும் வலது இடது கண்களிலிருந்து ஶ்ரீயாம் லக்ஷ்மியையும், வாணியாம் கலைமகளையும் தோற்றுவித்ததால் அம்பாள் லக்ஷ்மிக்கும் ஸரஸ்வதிக்கும் தாயார் ஸ்தானத்தில் விளங்குகிறாள். ஆதலில் இங்கு வாணிக்கும் நாரணிக்கும் மேலான பூரணி எனக் கூறப்பட்டது.


காஞ்சிமா நகரில் அப்பூரணியாம் பராசக்தியைக் காண கவலை அற்றுப்போகும்!! 


தாமரை மலர் போல் விளங்கும் பாதங்களிரண்டையும் காண அஷ்ட ஐச்வர்யங்களும் முக்தியும் கிடைக்கும்!!


தேவியின் மஹாமஹிமையுடைய குங்குமப் ப்ரசாத்தைப்பூண மஹத்தான புண்ணியமும், வீடு பேறும், கண்ணியமான நெஞ்சமும் ஏற்படும்!!


இப்படி ஸகல ஸௌபாக்யங்களுடன் விளங்கும் ஶ்ரீகஞ்சி காமாக்ஷி அம்பாளைக் காணப் புறப்படுவோம் வாருங்கள்!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 7:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 7:



"ஆதிமுதலாகி அண்டமெனலாந்தானாகி

நாதனொரு பாதி நானென்ற நாயகியின்

நீதிநெறியுடையார் நின்மலச் சிந்தையில் வாழ்

பாதி மதிசூடும் பார்புகழும் கற்பகத்தின்

வேத முடிப்பொருளின் மேருவாங் கோபுரத்தை

வீதிவலம் வந்து விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும்

காது குளிர்ந்திடவே காமாக்ஷி நற்புகழை

ஓதியுயர்ந்திடுவதென்றேலோர் எம்பாவாய்!!"


விளக்கம்:


"அனைத்திற்க்கும் ஆதியாகி, ஒன்றான ப்ரஹ்ம தத்வமே வடிவாகி, பின் விமர்ச சக்தியாக உலகமாய் விரிந்தவள் பராசக்தி.


ஏகவஸ்துவான பரப்ரஹ்ம தத்வம் முதலில் பெண்ணுருக்கொண்டு, பின்னர் ஆணுருக்கொண்டது என்பது சாக்தத்தின் கொள்கை. த்ரிபுரா ரஹஸ்யம் முதலிய க்ரந்தங்களும் அம்பாளின் வைபவத்தை இவ்வண்ணமே கூறுகின்றன.


முதலில் லலிதாம்பாளாகி, பின்னர் காமேச்வரனான பராசக்தி பின்னர் ஶ்ரீசக்ர ரூபமாய் சிவசக்தி ஸம்மேளன சக்ரமாகி, அதன் ப்ரதிபலிப்புமாகி உலகமாய் விரிந்து நின்றாள்.


அச்சிவத்தினொரு பாதியாகி விளங்கினாள் பராசக்தி. லலிதாம்பிகையான ஜகன்மாதா தனது வலபாகத்திலிருந்து காமேச்வரனாகத் தானே தோன்றினாள் என தந்த்ரங்கள் கூறும்!!


இக்காக்ஷியை மறுபடி ப்ரஹ்மாதி பஞ்ச மூர்த்தங்களுக்குக் காட்டினாள் என ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் கூறும்!!


நாதனொரு பாதியாய் நின்ற பராசக்தி, நெறிமாறாத சிந்தையுடைய பக்தர்களின் உள்ளத்தில் வாழ்பவள். மலங்களில்லா தூய நெறியுடையோர் உள்ளத்தில் இனிது அமர்பவள் பராம்பிகை.


பாதிமதியை சிரஸிலே சூடி விளங்குபவள். உலகெலாம் புகழ்ந்து ஓதற்குறியவள். வேதத்தின் முடிவான பொருளானவள்.


மஹாமேருவின் உச்சியில் ஶ்ரீயநத்ர மத்யத்தில் இனிது விளங்குபவள்.


மஹாமேருவை வலம் வருவது எப்படி!!? எனில் ஶ்ரீசக்ரபுரமான காஞ்சி நகரத்தினில் விளங்கும் பூ சிந்தாமணி க்ருஹமான காமகோஷ்ட ஆலயத்தை வலம் வந்து,


(காமாக்ஷி அம்பாள் ஆலயத்தை ஒரு முறை வலம் வருவது அச்வமேத யாகத்தின் பலனை அளிக்கும் என்பர்)


அங்கு குழுமியிருக்கும் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும்

(நம் ஊனக்கண்களுக்கு தெரியாமல் சக்தி கணங்களும், திவ்யௌக ஸித்தௌக மானவௌக உபாஸகக் கூட்டங்களும் அங்கே பரதேவதையான ஶ்ரீலலிதாம்பாளை தர்சிக்க குழுமியிருப்பதாக ஐதீகம்!!)


அவர்கள் காது குளிரும்படி ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் நற்புகழை எடுத்துக்கூறி, அவளின் பெருமைகளை ஓதி, அவ்வம்பிகையை உணர்வது எப்போது!!?


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 6

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 6


பஞ்சமலர்க்கணையும் தித்திக்கும் விற்கழையும்

அஞ்சுமடியர் இடர் நீக்க வல்லங்குசமும்

தஞ்சமெனுமவரை காக்கவல்ல பாசமுடன்

கஞ்சிநகர் தனிலே காமபீடந்தனிலே

மிஞ்சுமழகுடனை வீற்றிருக்கும் சாம்பவியின்

கஞ்சமலர்ப்பதத்தைக் கண்டுள்ளம் பூரித்து

கெஞ்சி பலர் செவிகள் கேட்கப்புகழ் பாடிக்

கொஞ்சியருள் பெறுவதென்றேலோர் எம்பாவாய்!!"


விளக்கம்:


தாமரை, அசோகம், மா, நவமல்லிகை, நீலோற்பலம் எனும் பஞ்சமலர்ப் பாணங்களையும், மிகவும் தித்திப்பான வில்லையும் (அதிமதுர சாப ஹஸ்தாம் -- மிகவும் தித்திப்பான வில்லை ஏந்தினவள் லலிதா த்ரிசதி) 


(ஏனைய தேவதைகளுக்கு இரும்பாலான ஆயுதங்களே, ஸாக்ஷாத் லலிதாம்பாளின் மற்ற அவஸரங்களில் கூட சண்டிகையாக, துர்கையாக, காளியாக, வாராஹியாக, விளங்கும் போது இவளுக்கே இரும்பாலான ஆயுதங்கள் உண்டு!! 


லலிதா,மஹா த்ரிபுரஸுந்தரி, காமாக்ஷி, ராஜராஜேச்வரி, காமேச்வரி எனும் ஶ்ரீவித்யோபாஸனையின் லக்ஷ்யமான மூர்த்திக்கே கரும்புவில்லும், மலர்க்கணையும்!! 


(ஶ்ரீமத்ஆச்சார்யாள் ஸௌந்தர்யலஹரியிலே கூறும் போது "சிரீஷாபா சித்தே" என்கிறார்!! வாகைப்பூவைப் போல ம்ருதுளமான ஹ்ருதயத்தை உடையவள் என்று கூறுகிறார்!!


ம்ருதுவான ஹ்ருதயம் உடையவளாதலால் கரும்புவில்லையும், புஷ்ப பாணங்களையும் ஏந்தி விளங்குகிறாள் நம் காமாக்ஷி!!)


அஞ்சேலென்று ஓடி அபயம் கேட்கும் அடியாருக்கு, அபயம் கொடுக்கும் அங்குசத்தை ஏந்தினவளும்,


(ஶ்ரீமத் ஆச்சார்யாள் த்ரிபுரஸுந்தரி வேதபதாக ஸ்தவத்திலே கூறும் போது "பண்டாஸுர வதத்தின் ஸமயம் ரக்தம் தோய்ந்ததால் செந்நிறத்தில் விளங்கும் அங்குசத்தை உடையவளே!!" என்கிறார்!! 


அம்பாள் ம்ருதுளமான ஹ்ருதயத்தை உடையவளாயின் அடியார் இடர் நீக்க கோபத்தை வரவழைத்துக்கொள்வாள். அவள் ஸ்வபாவம் கோபமில்லை. 


தேவீ மாஹாத்ம்யம் கூறும் "மதுபானத்தைப் பருகி கோபத்தை வரவழைத்துக்கொண்டாள்!!" என்று!!


தேவியின் மூர்த்தி பேதங்களனைத்தும் ஆனந்தத்தையே ஸ்வபாவமாய்க் கொண்டவை. துன்பம் நேர்கையிலே அழைக்கும் போது அபயங்கொடுத்து ரக்ஷிக்கும் குணங்கொண்டவை)


தஞ்சமென்று அடைந்தோரை காக்கவல்ல பாசத்துடன்,


ஶ்ரீபராசக்தி பஞ்சமலர்க்கணையும், தித்திக்கும் விற்கழையும், அங்குசமும், பாசமும் ஏந்தி பூலோக ஶ்ரீபுரமாம் ஶ்ரீமத் காஞ்சிபுரத்திலே, காமபீடந்தனிலே அறுபத்துநானூறு பீடத்தில் உயர்ந்த மஹாகாமகோடி எனும் பீடத்திலே விளங்குகின்றாள்.


"ஶ்ரீகாமாக்ஷி" எனும் அஸாத்யமான மஹாமந்த்ர கர்ப்பிதமான நாமத்துடனே மஹாகாமகோஷ்டத்திலே ஜ்வலிக்கின்றாள்.


(ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்திலே மஹாவிஷ்ணு லக்ஷ்மிக்கு கூறியது "ஓ!! லக்ஷ்மி!! ச்யாமளா வாராஹி முதற்கொண்ட சக்திக்கூட்டங்களால் ஸேவிக்கப்பட்ட த்ரிபுராம்பாள் ஶ்ரீகாமாக்ஷி எனும் நாமங்கொண்டாள்!! 


காம், கீம், கூம், கைம், கௌம், க: எனும் படி அங்கந்யாஸ கரந்யாஸாதிகளைச் செய்துகொள்


"ஓம் கம் காமாக்ஷ்யை நம:" என்பது தேவியின் உயர்ந்த மஹாமந்த்ரமாம்!!


ச்யாமளாதி சக்திகளால் உபாஸிக்கப்பட்ட மஹாமந்த்ரம் இது!! காமாக்ஷி பஞ்சசதியை ஜபிக்கும் முன்னர் இந்த மந்த்ரத்தை ஜபிக்க வேணும்!!


த்ரிபுராம்பாளின் ஆயிரம் ஸஹஸ்ரநாமங்களிலும் ஶ்ரீகாமாக்ஷி பஞ்சசதி உயர்ந்தது!! த்ரிபுராம்பாளின் ஐநூறு நாமங்கள் ச்யாமளாதி சக்திக்கூட்டங்களாலே சொல்லப்பட்டன!!


குறிப்பு: ருஷி சந்த்ஸ் முதலியன மூலத்தில் கண்டுகொள்க!!)


பஞ்சதசியைப் போல ஒரு ஶ்ரீவித்யா பேதமே காமாக்ஷி எனும் நாமம். காமாக்ஷி என்பது ஒரு நாமம் மட்டுமல்ல மஹாமந்த்ரமாம்!!


அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாக, ஜகதாம்பாளாக, ஸர்வநந்தமயமஹாபீடமாம் சாம்பவ பீடத்திலே ஶ்ரீசாம்பவியாக வீற்றிருக்கிறாள்!!


நவமாவரணம் ஶ்ரீசாம்பவ மஹாசக்ரம்!! ஶ்ரீசாம்பவ பீடத்திலே ஜகன்மாதா ஶ்ரீலலிதாம்பாள் வீற்றிருப்பதால் சாம்பவி என்று பெயர் அவளுக்கு!!


அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி இரண்டு கால்களையும் இறுக்கி மடித்த யோகாசனத்தில் வீற்றிருக்கின்றாள்!! 


ஶ்ரீகாமாக்ஷி ஸுத்தமான ஸமயாசாரத்தால் மட்டுமே அடையத்தக்கவள்!! ஸமயமார்க்க உபாஸனையானது ஸநகாதி மஹருஷிகளாலே ஶ்ரீஸுபாகம பஞ்சகம் என்று இயற்றப்பட்டது. அவற்றுள் ஶ்ரீசுகர் இயற்றிய "சுக ஸம்ஹிதா" எனும் மஹாக்ரந்த்தினை அவலம்பித்து ஶ்ரீதூர்வாஸாச்சார்யாள் ஶ்ரீகாமகோஷ்டத்தில் ஶ்ரீசக்ர ஸ்தாபனஞ்செய்து, ஶ்ரீவித்யோபாஸனையால் காமாக்ஷி அம்பாளுக்கு பூஜா பத்ததி அமைத்தார்!!


அப்படிப்பட்ட அஸாத்யமான வடிவுடைய ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் திருவடியைக் கண்டு உளம் பூரித்து, பலர் செவிகள் அவள் புகழை கேட்கும்படியாக பாடி, அவள் அருளைப் பெறுவது என்று!!"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 5:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 5:



"காலைக்கடன் கழித்து காமாக்ஷி அம்மையினை

வேலைப் பிளந்துதிக்கும் விண்மணியிற்க் கண்டறிவீர்

மாலைப் பொழுதினிலே மாமதுரை மீனவளை

நீலத் திருவானின் வெண்ணிலவில் கண்டறிவீர்

பாலைப் பருவமுள மங்கையெனப் பார்த்திடுவீர்

சீலச் சுமங்கலையின் செம்முகத்திற்க் கண்டறிவீர்

வேலைக் கரம்பிடித்தான் வேலிலையிற்க் கண்குளிர்வீர்

கோலக்குணவதியைக் கண்டேலோர் எம்பாவாய்"


விளக்கம் :


காலைக் கடன் கழித்து -- காலையின் இயற்ற வேண்டிய தேவ கடன் முதலியவைகள் முடிந்த பின்னர்,


ஶ்ரீவித்யோபாஸகர்க்கு வைதீக ஸந்த்யா, தாந்த்ரீக ஸந்த்யா எனும் இரு உபாஸனைகள் உண்டு!! வைதீக தாந்த்ரீக ஸ்ந்த்யாவந்தனங்களை பூர்த்தி செய்து பின்னர் மேகங்களைப் பிளந்து கொண்டு வரும் சூர்ய மண்டலத்தின் மத்தியிலே ஶ்ரீகாமாக்ஷி பரதேவதையைக் கண்டறிவீர்!!!


உதித்து வரும் சூரியனின் மத்யத்தில் உதிக்கும் சூரியன்கள் கோடானுகோடிகளைப் போல் ஒளிபொருந்திய காமாக்ஷி அம்மையினை த்யானிப்பீர்!!


காயத்ரி வடிவானவள் ஸாக்ஷாத் அம்பாளே என்பதும் ஸந்த்யோபாஸகர்கள் இயல்பில் சாக்தர்களே என்பதும், காயத்ரி ஸாக்ஷாத் ப்ரஹ்மவித்யையான ஶ்ரீஅம்பாளே என்பதும் ஶ்ரீமத் தேவி பாகவதம், ஶ்ரீமத் த்ரிபுராரஹஸ்யம் மற்றும் த்ரிபுரா தாபினி முதலிய உபநிஷதங்கள் மற்றும் அனேக ஶ்ரீவித்யா க்ரந்தங்கள் மூலமாகத் தெரிகிறது!!


ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர ரூபமாய் விளங்கும் பராசக்தியே ஸாக்ஷாத் காயத்ரியாக, அந்த ப்ரகட காயத்ரியின் இருபத்துநான்கு அக்ஷரங்கள் ஸ்தம்பங்களாக அமைய, அதனுள் காயத்ரி மந்த்ரத்தாலே ஸூசிக்கப்படும் ப்ரஹ்மமான ஶ்ரீகாமாக்ஷி தேவி ப்ரகாசிக்கின்றாள்!!


ஆதலால் சூர்யமண்டலத்தில் பகவதி உமையை ப்ரார்த்திக்கவேணும்!!


அதுபோல் மாலைப் பொழுதினிலே சந்த்ரோயம் ஆன பின்னர் ஶ்ரீசக்ரபுரியாம் மதுரையில் மீநாக்ஷி எனும் அஸாத்யமான நாமரூபத்துடன் கரும்புவில் புஷ்பபாணங்களை தாங்கிக்கொண்டு மஹாத்ரிபுரஸுந்தரியாய் விளங்கும் அம்பாளை த்யானிக்க வேணும்!!


மனதில் ஸஞ்சலம், க்ரோதம் முதலிய யாவும் பரதேவதையை சந்த்ர மண்டலத்தில் த்யானிப்பதாலே அழியும்!! மனசாந்தி ஏற்படும்!!


சூர்யமண்டலத்தில் பரதேவதையை த்யானிப்பதால் ஞானம் பெருகும்!!


பாலாம்பாளாக விளங்கும் அவளுடைய வடிவைத் த்யானிப்பீர்!!


மங்கைப் பருவமுள்ள மாதாவை த்யானிப்பீர்!!!


பாலை எனில் ஒன்பது வயதான பெண்


பாலைப் பருவமுள மங்கையெனில் பதினாறு வயதான கன்யை.ஜகன்மாதா பகவதி நித்யகன்யாம்பாளாக ஸாக்ஷாத் சண்டிகா ரூபத்தில் துர்கா பரமேச்வரியாக ஜ்வலிக்கும் க்ஷேத்ரம் கன்யாகுமரி. பாணாஸுரனை ஒழித்து பகவது துர்கை தவக்கோலத்தில் உள்ளாள். அவளே பாலைப் பருவமுள மங்கையாம்!!


சீலச் சுமங்கலை எனில் நித்யஸுவாஸினியாக காமாக்ஷியாய், மீனாக்ஷியாய், தர்மஸம்வர்த்தினியாய், விசாலாக்ஷியாய், காந்திமதியாய், அபயப்ரதாம்பாளாய், மங்களாம்பாளாய், கமலாம்பாளாய் பரம ஸுவாஸினியாக பரமசிவனாரின் மஹாசக்தியாக, காமேச்வரன் கட்டின மங்களஸூத்ரம் கழுத்தில் விளங்க, மூக்குத்தியும் புல்லாக்கும் ஶ்ரீசக்ர தாடங்கங்களும் மிளிர, உதிக்கும் சூர்யனைப் போல் வகிட்டுச் ஸிந்தூரம் பொலிய காக்ஷி தரும் அம்பாள் வடிவம். அத்தகைய அழகிய முகத்தைக் கண்டு ஆனந்தமுறுவீர்!!


வேலைக் கரம் பிடித்த வேலவன் வேல் ஸாக்ஷாத் தேவியின் பஞ்சதசாக்ஷரமே!! பகவதி பார்வதி மூன்று த்ரிகோணத்தைச் சேர்த்து தன் உடலிலிருந்து "சக்தி" எனும் ஆயுதத்தை அளித்தனள். அதுவே வேலாயுதமாம்!! அவ் வேலின் இலை தேவியின் மஹாமந்த்ரமே!! அதில் அம்பிகையை கண்டுணர்வீர்!!


கோலக்குணவதியை, கோமளாங்கி மீநாக்ஷியை, காமேச்வரனின் காமாக்ஷியை கண்டு கை தொழுவீர்!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 4:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 4:



"உகமெல்லாம் ஓடியபின் ஒன்றாக நின்றிச்

சகமெல்லாம் ஈன்றருளும் சீர்மிகுந்த தாயை

நகமெல்லாம் நாரணணின் பத்துதிப்பின் வித்தாய்

முகமெல்லாம் தண்ணருள் சேர் புன்முறுவல் காண

இகமெல்லாம் என்றுணையாய் என்குடியைக் காத்துச்

சுகமெல்லாம் ஈயுஞ் சுமங்கலியைக் கண்டு

பகலெல்லாம் பாடி பரவசத்தில் ஆடி

அகமெல்லாம் போய்க் குளிர்வதென்றேலோர் எம்பாவாய்!!"


"ஸர்வயுகங்களும் முடிந்த பின்னர் கல்பாந்தரத்திலே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகளும் உன்னிடம் ஒடுங்கிய பின்னர், ஏகவஸ்துவாய், தன்னைத் தவிர்த்து வேறொன்றுமில்லாத பரவெளியாய் விளங்கும் அம்மே!! பின்னர் உனது யந்திர வடிவான ஶ்ரீசக்ரத்தையும், அதன் ப்ரதிபலிப்பான ப்ரஹ்மாண்டகோடிகளையும் ஒரு கணத்திலே ஈன்றெடுத்தவளான தாயே!!


ஒவ்வொரு கைவிரல் நகக்கணுவிலிருந்தும் மஹாவிஷ்ணுவாம் ஶ்ரீமந்நாராயண மூர்த்தியின் தசவிதமான அவதார பேதங்களை கோடிக்கணக்கில் உண்டாக்கியவளே!!


(ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு முறை தசாவதாரங்களின் உற்பத்தியின் பொருட்டே கோடிக்கணக்கான தசவித அவதாரங்கள் என ஸூசிக்கப்பட்டது. 


ப்ரஹ்மாண்டபுராண உத்தர பாகம் ஶ்ரீலலிதோபாக்யானம்


ஶ்ரீமத் த்ரிபுரா ரஹஸ்ய மாஹாத்ம்ய காண்டம்


மற்றும் பல தந்த்ரங்களில் இந்த சரித்ரம் உண்டு!!


கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : (ல.ஸ)


கராங்குலிநகோதய விஷ்ணு தசாவதாரே (கமலாம்பா நவாவரணம்))


அருள்பொழியும் முகமெல்லாம் ப்ரகாசமாகி விளங்கும் மந்தஸ்மித்தினை உடையவளே!! ஸர்வாநந்தமய மஹாபீடத்தை உடையவளாதலால் பரமப்ரகாசமான ஆனந்தத்தின் ஸ்வரூபத்துடன் கூடினவளே!!


அத்தகைய ஸ்வரூபத்தைக் காணும் வண்ணம் உன் ஆலயஞ் சேர்ந்து விளங்கும் போது, எனக்கு துணையாய் விளங்கி, என் குலத்திற்கு தெய்வமாய் குலத்தைக் காத்து, இவ்வுலகில் ஸகல ஸௌபாக்யங்களையும் ஈந்தருளும் சுமங்கலையான காமாக்ஷியே!!


உன்னைக் கண்டு பகற்பொழுதெல்லாம் பாடி, பரவசத்தினால் உள்ளம் உருக ஆடிக்கொண்டு

(பலவிதமாய் உன்னை பாடவும் ஆடவும் -- ஶ்ரீசக்ர ராஜ( அகத்தியர் கீர்த்தனை))


அத்தகைய அருட்ப்ரவாஹத்தால் அகம் குளிர்ந்து போக, மனமானது அழிந்து லயத்தை அடைய, உன் ஸ்வரூபமானது உணரப்பெற்றதாலே அகம் குளிர்ந்து மனம் அழிந்து போகும் நிலையை எப்போது அருள்வாய் தாயே!!"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 3:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 3:



"செம்மான் மகளைத் திருடித் திருமணங்கொள்,

பெம்மான் முருகனைப் பேணி பணிந்திடும் நாள்,

அம்மாவெமை வந்து ஆட்கொண்டாளாட்கொண்டாள்,

இம்மாவருள் அதனை ஏத்தாதிருந்திடவோ!?

சும்மாவினி நாவும் சொல்லாதிருந்திடுமோ!?

தம்மாலுலகெலாம் தாங்கி உணவூட்டும்,

செம்மால் புகழ்ந்தேத்தும் சீர்கொண்ட கற்பகத்தை,

உம்மாலியன்றவரை ஓதேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"மான் வயிற்றிலுதித்த வள்ளிப்பிராட்டியைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்ட பெருமானாம் முருகனையே வழிபட்டு வரும் நாளில், அதத்கைய முருகப்பிரானுக்கும் மற்ற உலகினர் அனைவருக்கும் தாயாக விளங்கி வரும் பராசக்தியாகிய ஶ்ரீகாமாக்ஷி தானாகவே வந்து ஆட்கொண்ட மஹிமையை எங்ஙனம் சொல்வேன்!! எப்படிச்சொல்வேன்!!


(ஶ்ரீஸுப்ரமண்ய உபாஸனை ஶ்ரீவித்யையிலேயே கொண்டு விட்டுவிடும் என்பதை எளிமையாய்க் கூறுகிறார் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்!! ஆதியில் முருகனை வழிபட்டுப் பின் அம்பிகையிடம் சரணாகதி செய்த அடியார் அனேகருண்டு!!


ஶ்ரீவித்யை தமிழகத்தில் பரவக் காரணமாவிருந்த ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதர் எனும் ஶ்ரீநெடிமிண்டி ஸுப்ரமண்ய ஐயர் ஶ்ரீமுருகனை உபாஸித்தவரே. பின் ஶ்ரீகுஹாநந்தநாதாளை அடைந்து அவரருளால் ஶ்ரீவித்யையை அடைந்து, பன்னிரு வருஷங்கள் ஶ்ரீவேலாயுதத்தையே ஶ்ரீசக்ரமாய் பூஜித்து வந்தவர்!!


ஶ்ரீஅருணகிரிநாதரும் ஶ்ரீபராசக்தியின் பலவடிவங்களையும் மந்த்ர பீஜாக்ஷரங்களையும் திருப்புகழின் அனேக இடங்களில் கூறியுள்ளதைக் காண்க!!


ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஶ்ரீசிதம்பரநாதமஹாயோகீச்வரரிடம் காசியில் ஶ்ரீவித்யா மஹாஷோடஷாக்ஷரி எனும் மஹாமந்த்ரோபதேசத்தை அடைந்து, பின் திருத்தணி வர, ஶ்ரீஷண்முகர் வயதான கிழவராய் தோன்றி கல்கண்டை அவர் வாயில் போட, ஶ்ரீவித்யா பரமான ஶ்ரீகுருகுஹ விபக்திக் கீர்த்தனையைத் தொடங்குகிறார். ஶ்ரீஸுப்ரமண்யரைத் தன் குருநாதராகவும், ஶ்ரீவித்யையில் உயர்ந்த காதிமதத்தைத் சேர்ந்தவராகவுமே தன்னை முதல் கீர்த்தனையான "ஶ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி" என்பதில் கூறுகிறார்.


ஶ்ரீரமணமஹருஷியை ஸுப்ரமண்யாவதாரமாகவே கூறுவதுண்டு. ரஹஸ்யமாக ஶ்ரீசக்ரபூஜையையே அவர் செய்து வந்தார் என்றும் கூறுவர்.


அனேக மஹான்கள் இது போல் ஸுப்ரமண்ய உபாஸனை செய்து பின்னர் அவரருளால் ஶ்ரீவித்யோபாஸனை அனுக்ரஹிப்பெற்று பரதேவதையின் திருவடியை அடைந்துள்ளனர்!!)


இப்படி வலியவந்து ஆட்கொண்டு அருளும் பரதேவதையின் அருளைப் போற்றிப் பாடாது இருக்கவும் இயலுமோ!!?


எனது நாவும் காமாக்ஷியம்மையின் மஹிமையைப் பேசாது இருந்திடுமோ!!?


இவ்வுலகையெல்லாம் தமது கருப்பத்திலே தாங்கி, அவ்வுயிர்க்கூட்டத்திற்கு உணவளித்தருளும் கல்பகக்கொடியான ஶ்ரீகாமாக்ஷியம்மையை, திருமாலான மஹாவிஷ்ணுவால் வழிபடப்பெற்ற எமது அம்மையை,


நம்மாலியன்றவரை அவள் புகழைப் பாடிப் பணிய வேண்டாமோ!!?"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 2:

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 2:



"சும்மாவிருவென்று சொன்னார் ஒரு சாரார்

அம்மாவெனக்கூவி ஆறுதல் நாம் காணாது

எம்மாலிருக்கவிங்காகுமோ வாய்திறந்து

அம்மாவென அழைத்தோம் ஆயேவென அழைத்தோம்

சிம்மாஸனத்துறையும் தேவியெனவழைத்தோம்

பெம்மான் சிவனிடத்துப் பெண்மணி என்றழைத்தோம்

நம்மாலியன்றவரை நாவாரப் பாட்டிசைத்தோம்

சும்மாவிருக்குமோ சொல்லேலோர் எம்பாவாய்!!"


விளக்கம்:


""சும்மா இரு!!" என்று அருணகிரியாருக்கு ஶ்ரீமுருகப்பெருமான் உபதேசித்ததாகக் கூறுவர். அத்தகைய ஸமாதி நிலையோ ஸாமான்ய மக்களான நம்போன்றோருக்கு ஸித்திப்பது கடினம். சும்மா இருப்பது என்றால் உடல் மட்டுமல்ல, மனமும் அடங்கிய நிலையே அது!! அத்தகைய நிலையை அடைவது கடினமல்லவா!! அத்தகைய நிலையை உபதேசிப்பவர்கள் ஒரு சாரார்!! அவர்கள் அனைத்தும் உணர்ந்தவர்கள்!!


ஆனால் நம்போன்றோரால் அங்ஙனம் இருக்க இயலாது அல்லவா!! நம்மால் பிராட்டியாகிய ஶ்ரீகாமாக்ஷியம்மையை அம்மா எனவழைத்து ஆறுதலடையாமல் எப்படி இருக்க இயலும்!! ஆதிசக்தியான அம்பிகை கருணையுருக்கொண்டு கைகளில் கரும்பும், பூவாளியும், மாவெட்டியும், பாசக்கயிறும் தாங்கி ராஜராஜேச்வரியாக, திரிபுரசுந்தரியாக, காமாக்ஷியம்மையாக காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளாள்.


அவளை "அம்மா!! தாயே!! பராசக்தி!!" எனவழைத்து மகிழ்வதைக் காட்டிலும் நிம்மதியும்,ஆனந்தமும், ஆறுதலும் உண்டோ!! ஆதலின் அவ்வம்பிகையாகிய ஶ்ரீகாமாக்ஷித் தாயாரை வாய்நிறைய "அம்மா!!" என்றழைத்தோம்!! "ஆயே!!" என்றழைத்தோம்!!


"ஶ்ரீசக்ரத்தின் மத்யத்திலே பிந்துபீடத்திலே பஞ்சப்ரேதமயமான மஹாஸிம்மாசனத்திலே உறையும் தேவி!!" என அழைத்து மகிழ்ந்தோம்!!


"எம்பெருமான் சிவனிடத்து அமர்ந்து விளங்கும் பெண்ணில் நல்லாள்!!" என்றழைத்தோம்!!


அம்பாளின் பெருமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கவ்வளவு வாயாரப் பாட்டிசைத்தோம்!! தேனினும் இனிமை வாய்ந்த காமாக்ஷியாம் ஶ்ரீலலிதையின் நாமத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்தோம்!!


ஓ!! பெண்ணே!! இனியும் சும்மாவிருக்கலாமா!! நீ!! காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுவாயாக!!"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை


 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 1:




கணபதிக் காப்பு :


அத்திமுகத்தோனை அன்றிருந்து பேணாது

சத்தி தனதென்று தானினைந்த சங்கரனை

சத்தியியல்பறிய தேரச்சு தூள் செய்த

சித்தி விநாயகனை சித்தத்தில் வைத்தீரேல்

சத்தி அருள்பெறலாம் சாதிக்கலாம் ஏதும்

முத்தி நிலைபெறலாம் மும்மலமும் நீங்கியொரு

சுத்தவுளம் பெறலாம் தூய்மையாம் வாழ்வுறலாம்

நித்த நிலைபெறலாம் நின்றேலோர் எம்பாவாய்


அருட்பாவை 1:


தாயைத் தனிமுதற் சாட்சியாம் சங்கரியை

மாயப்பிணி அகற்றும் மந்திர மாமணியைத்

தூயப்பெருவாழ்வு தந்தருளும் சுந்தரியைச்

சேயைத் துணைகொளும் சீர்மிகுந்த கற்பகத்தை

பேயைப் பழிக்கும் துயிலகற்றிப் பேதையரே

நேயத்துடன் கூடி நின்மலச் சிந்தையொடு

வாயைத் திறந்து நீர் வாழ்த்தினால் வாழ்ந்திடுவீர்

காயத்துடன் வீடு கண்டேலோர் எம்பாவாய்


விளக்கம் :


மார்கழி முதல் நாளுக்கான அருட்பாவை விளக்கம். காமாக்ஷியம்மையின் அருள்பெற்ற மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷிதாஸர் இயற்றியது.


"உலகெலாம் ஈன்றெடுத்த அன்னையாம் அம்பிகையை, தனிப்பெரும் ப்ரஹ்மமாய் விளங்கும் பராசக்தியை, உலகிற்கெல்லாம் ஒரே சாட்சியாய் விளங்கும் உமா தேவியை, சங்கரனின் இல்லாளை, மாயையெனும் கொடும் பிணி அகற்றும் மஹாமந்திரமாம் பஞ்சதசாக்ஷரி எனும் ஶ்ரீவித்யை வடிவானவளை, பிரமவிஷ்ணுக்களும் அடைவதற்கு அரிதான திருவடிமுத்தியாம் தூயப்பெருவாழ்வு தந்தருளும் திரிபுரசுந்தரியை, வணங்கும் சேய்களுக்கு அஞ்சேலென ஓடிவந்து அருள் கற்பகவல்லியான அம்பிகையை,


பேயைப் பழிக்கக்கூடியளவிற்கு விடியற்காலையில் தூங்கும் பேதைகாள்!!, வாருங்கள் நியமத்துடன் கூட மலங்களில்லாச் சிந்தையுடன், வாய்விட்டு காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுங்கள்!! ஏகாம்பரநாதரின் இல்லாளின் மகிமையைப் பாடுங்கள்!! காமேச்வரனின் சக்தியைப் பாடுங்கள்!! அவ்வாறு வாழ்த்தினீரேல் இவ்வுடல் நிலைபெற்று விளங்கும்போது முத்திநெறியை உணரும் ஜீவன்முக்தி நிலையை அடைவீர்!!"


-- மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

அஷ்டமி சப்ரம் !

 மார்கழி அஷ்டமி விரதம் !


19.12.19 ! மார்கழி 3 !


அஷ்டமி சப்ரம் !



ஈசன் உலகிற்கு படியளக்கும் நாள் !


உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. 


ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.


சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.


‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.


‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.


எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.


தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.


அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.


அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.


விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.


இந்நிகழ்ச்சி, நாளை அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவர்  அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் . மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர் .


 திருச்சிற்றம்பலம்.

Monday, 14 December 2020

மார்கழி ஸ்பெஷல் !

 மார்கழி ஸ்பெஷல் !



ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் பூமாதேவி,

``வராக அவதாரத்தின் போது, இரண்யாட்சன் என்னைக் கடலுக்குள் ஆழ்த்திய போது, அழைத்ததும் வந்து காப்பாற்றினாயே கண்ணா... என்னைப் போலவே, பல கோடி பக்தர்கள் இன்று பூமியில் அவஸ்தைப்படுகிறார்களே.. அவர்கள் அழைத்தாலும் நீ வருவாயா..?" தன் மீது உய்யும் தன் மைந்தர்களான மானுடர்கள் மேலான பரிவோடு கேட்டாள்.


பரந்தாமன் சிரித்தபடி, ``நிச்சயமாக. ஆனால், என்னை அழைக்க மனிதர்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்கு நீ ஒருமுறை பூமியில் அவதரித்து, கீதையின் பொருளை மீண்டும் ஒருமுறை சொல்வாயாக!" என்று பூதேவியிடம் பணித்தாராம்.


திருமாலின் ஆணைப்படியே பூமாதேவி, பரந்தாமன் `வடபத்ர சாயி' என்ற பெயர் தாங்கி அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித்திங்கள் வளர்பிறையில் பூர நட்சத்திர தினத்தில் பூமாதேவி, 


`துளஸிகான நோத்பவாம் பாண்டியே விஸ்வம்பராம் கோதாம் வந்தே..' 

என்று பகவானுக்காக விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் பராமரித்த மலர்வனத்தில் துளசி செடிகளுக்கு இடையில் அவதரித்தாளாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த குழந்தையை, அனந்தனின் அருள் கொடையாகவே பார்த்த பெரியாழ்வார். மனைவி விரஜையுடன் வடபத்ரசாயியின் திருவடியில் மகளை வைத்து, அவளுக்குக் கோதை என்ற பெயரைச் சூட்டி, அவளுக்கு ஞானத்தைப் போதிக்கவும் ஆரம்பித்தார்.


சிறுவயது முதலே கண்ணனின் பெருமைகளைத் தந்தை சொல்லக் கேட்டு வளர்ந்த கோதை, ஒரு கட்டத்தில் அந்த அனந்தனைத் தன் மணாளனாகவே மனதில் வரிந்துகொண்டாள். மற்ற அனைவரும், இறைவனுக்குச் சாற்றிட பூமாலைகளைக் கோத்துக்கொண்டிருக்கும் பொழுதில், கோதை மட்டும் அந்தத் திருமாலைக்கு பூமாலையுடன் பாமாலையையும் சேர்த்து இரு மாலைகளைத் தொடுத்துக் கொடுத்தாள்.  


`நானிலம் அளந்தவனுக்கு நாயகியாக வருவதற்கு நான் முழுவதும் ஏற்றவள்' என்ற பெருமையுடன் தான் கட்டிய மாலைகளைத் தானே முதலில் சூடிப் பிறகு அந்த மாலையை அவள் பகவானுக்குச் சாற்றக் கொடுத்தனுப்பினாள். இதைப்  பார்த்து வருத்தம் கொண்ட பெரியாழ்வார், மறுநாள் கோதை சூடாத மாலையை எடுத்துச்சென்றார்.

ஆனால் மாலவனோ அதை ஏற்க மறுத்து 

``கோதை சூடிய மாலைதான் எமக்கு ஏற்றது. அதைக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணையிட்டான். அன்றுமுதல் அவள் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'யும் ஆனாள். 


அந்த நந்தகோபன் குமரனை, பாற்கடலில் உறங்கும் பரமனை, ஓங்கி உலகளந்த உத்தமனை, ஆழிமழைக் கண்ணனை, தாமோதரனை, நாராயணனை, மாதவனை, மணிவண்ணனை, கேசவனை, குறைவொன்றும் இல்லாத கோவிந்தனை, மனதுக் கினிய கண்ணனைப் பாடிக் கொண்டிருந்த போதெல்லாம் அகமகிழ்ந்த பெரியாழ்வார், மகளை மணமுடித்துக் கொடுக்கவும் விளைகிறார்..

ஆனால், திருமணப் பேச்சை எடுத்தவுடனேயே ஆண்டாள் `மானிடவனை மணாளன் ஆக்கி வாழமாட்டேன். நான் நாரணன் நாயகியாகவே வாழ இருக்கிறேன்..!' என்று அரங்கன் மீதான தனது காதலைக் கோதை சொல்லக் கேட்டு மிகவும் மனம் வேதனையடைந்தார் தந்தை பெரியாழ்வார்.


ரங்கன் ஆண்டாளின் கனவில் வந்து கைப்பற்றி வாரணம் ஆயிரம் சூழவலம் வந்தான். அந்த நினைப்பே அவளைப் பேருவகை கொள்ளவைத்தது. அந்த உவகையே நாச்சியார் திருமொழியாக மலர்ந்தது. அவளுக்கென்ன அரங்கன் கனவில் மிதக்கலாம். ஆனால் தந்தையின் துயரம் அத்தனை எளிதானதா? நாள்கள் செல்லச் செல்ல, கோதையை எண்ணிக் கவலைகொண்ட பெரியாழ்வார், ஒருமுறை இறைவனிடம் தன் மனக்குறையை முறையிட்டார். 


அன்றிரவு பெரியாழ்வார் கனவில், சங்கு, சக்கரத்துடன் தோன்றிய பரந்தாமன்,

``நாளை கோதையை, திருவரங்கத்துக்கு அழைத்து வாருங்கள். அவளை நான் மணமுடிக்க விரும்புகிறேன்" என்று திருவாக்கு அருளினான். இதே போன்று திருவரங்கத்து கோயில் அர்ச்சகர் கனவிலும், மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றி, தான் ஆண்டாளை மணக்கவிருக்கும் செய்தியை தனித் தனியே சொல்லி மணவிழாவுக்குத் தயார் செய்யச் சொன்னான்.


இதெல்லாம் தெரியாமல், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து திருவரங்கம் செல்லத் தயாரான பெரியாழ்வாரையும் கோதையையும் மன்னரே எதிர்கொண்டு வந்து யானையில் ஏற்றித் திருவரங்கம் அழைத்துச் சென்றான். 


கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மறையோர்களின் வேத கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அத்தனை நாள்களும் அரங்கனையே நினைத்து வாழ்ந்த ஆண்டாளின் மனம் எத்துணை விரைவாய் அவனை அடையலாம் என்று ஏங்கிக்கொண்டிருந்தது. 


அரங்கனின் முன் அழைத்து வரப்பட்டாள் கோதை. வேதியர்கள், சங்குகள் முழங்கினர். அவள் மனதுள் கோபாலனின் உதடுகளை வருடிய பாஞ்சசன்யத்தை நினைத்துக்கொண்டாள். முரசுகளும் பறைகளும் வாழ்த்தொலிகளும் முழங்கின.


 ``மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்..! பாமாலை சாற்றினாள் கோதை  பூமாலை மாற்றினாள்..!" என்ற வாழ்த்தொலிகள் எங்கும் நிறைந்திருந்தது.  


கோதை மெள்ள நடந்தாள். அவள் மனம் மாதவன் மேல் பித்தம் கொண்டிருந்தது. விஷ்ணுசித்தரை ஏறெடுத்தாள். பூமிப் பிராட்டியையே மகளாக்கிக்கொண்ட அந்த மாமனிதரின் திருவடிகளைத் தொழுதுகொண்டாள். அடுத்து அவள் தொழ வேண்டியவர்கள் எவரும் இல்லை என்பதை அவள் அறிவாள். நேரே அரங்கனின் சந்நிதியை அடைந்தாள். பள்ளிகொண்ட பெருமாளாய் படுத்திருக்கும் அரங்கனையும் தொழுதாள். தனது கழுத்திலிருந்த மாலையை அவனுக்குச் சாற்றினாள். அடுத்த கணம் மன்னவனும் மற்றவரும் கண்டுகொண்டிருக்க அவள் ஜோதி வடிவமாகி அரங்கனோடு இரண்டறக் கலந்தாள்.


அதைக்கண்டவர்கள் மனமும் உடலும் சிலிர்த்தனர். ரங்கா! ரங்கா! என்ற கோஷம் எழுந்தது.  

கண்ணனாக அவதரித்து உபதேசித்த கீதாச்சாரத்தின் பொருளை எளியவர்களுக்கு எடுத்துரைக்க பூமாதேவி கோதை நாச்சியாராய் அவதரித்த கதை இது. 


``தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியும் தான் மிக விளங்கக் கூடியவன் பரந்தாமன்.." என்பதைக் காட்டியது கோதையின் வாழ்க்கை மட்டுமல்ல, அவள் அருளிய திருப்பாவையும்தான்.!


திருப்பாவைப் பாடல்களை உற்றுக் கவனித்தோமேயானால் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம். அதன் முதல் பத்து பாசுரங்கள் 'இறைவனது பெயரைப் பாடு’ என்று வலியுறுத்தும் இரண்டாவது பத்து பாசுரங்கள் `இறைவனின் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்..' என்று வழிகாட்டும்.                                                                                                                       


மூன்றாவது பத்து பாசுரங்கள் `அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்..' என்று வழிகாட்டும்.

``மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு 

மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே..

(பகவத் கீதை 18:65)


``என்னை அடைய, என்னிடம் மனதை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபடு. என்னையே வணங்கு. இதைச் சத்தியம் செய்து உனக்குக் கூறுகிறேன்.." என்று பகவான் கீதையில் சாற்றிய மறையைத்தான், இந்த முப்பது பாடல்களில், எளிய, இனிய தமிழில் நமக்குக் எடுத்துக் கொடுத்துவிட்டாள் கோதை. 


``கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்" சொல்லி மார்கழி நோன்பிருப்பவர்கள் திருமாலின் திருவருளையும், அனைத்துச் செல்வங்களையும் ஒருங்கே பெற்று இன்புறுவர் என்பதை,

``செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்..." என்ற சாத்துமறையின் இறுதி வரிகள் நமக்கு உறுதியளிக்கிறது..!


நாமும் கோதையைப் போலவே மார்கழியில் கோதையின் திருப்பாவையைத் தவறாமல் பாடி, நம்மை இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து, அவனது திருவருளைப் பெற்று இன்புற்றிருப்போம் வாருங்கள்..!


``பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு.."


`ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்'

Monday, 7 December 2020

அக்ஷய திருதியை ஸ்பெஷல் !

 அக்ஷய திருதியை ஸ்பெஷல் !



குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம்!


பால்ய நண்பனான கண்ணனை தன் மனைவி கொடுத்தனுப்பிய அவலுடன் சென்று குசேலன் சந்தித்தது அட்சய த்ருதியை அன்று. அந்த நண்பன் கொண்டு சென்ற அவலை கண்ணனும் ருக்மிணியும் உண்டு குசேலனை குபேரனாக்கிய பொன்னாள் இது. இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். 


இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு. 


குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்

கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:

த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ

தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ


ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா? 


ஸமான ஸீலாபி ததீயவல்லபா

ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ

கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே

ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே


குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான  கோபாலன் தாங்களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?


இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா

ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே

ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ

வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்


குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர்  கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா? 


கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்

க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்

ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்

தவாதிஸம்பாவனயா து கிம் புன: 

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே  இல்லை. அப்படித்தானே? 


ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்

கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்

யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை

ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே


நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர்களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா? 


த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத

ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா

க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்

ரமா கிலோபேத்யகரம் ருரோத தே


குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து 

நிறுத்தினார்கள், இல்லையா? 


பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா

புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்

பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ

விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :


உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா? 


யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ

வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ

த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:

க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்


‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்

திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழகிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா? 


கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்

க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்

ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்

புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்


‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை அப்போது அவர் உணர்ந்தாரல்லவா? 


ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்

ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ

த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ

மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.


ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்து கொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.


 ஸ்ரீ க்ருஷ்ணா உன் திரு வடிகளே சரணம் !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...