ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 16:
நூற்பயன் :
"அஞ்சுபுலனடக்கி யானென்பததற்றறிந்து
கஞ்சிநகர் வாழும் காமாக்ஷியம்மையிரு
கஞ்சமலர்ப்பதங்கள் கண்டு மனமகிழ்ந்து
தஞ்சமெனவருட்பாவை நிதம் பாடி
கொஞ்சுமடியார்க்குத் தேவியருள் சேரும்
பஞ்சவினை தீரும் பார்புகழும் வாழ்வுவரும்
மிஞ்சுமழகுவரும் மேலான கல்விவரும்
பஞ்சநிதி வருமே காணேலோர் எம்பாவாய்'
விளக்கம் :
ஐந்து புலன்களையுமடக்கி, நானெனும் அஹங்காரத்தை விட்டொழித்து, காஞ்சிபுரத்தில் வாழும் ஶ்ரீகாமாக்ஷியம்மை இரு தாளை மட்டுமே கண்டு மனம் நிறைந்து மகிழ்ந்து, தேவி பாதமே தஞ்சமெனும் உள்ளம் நினைந்து, காமாக்ஷியருட்பாவையை நிதம் பாடி, கொஞ்சுமடியார்க்குத் ஶ்ரீகாமாக்ஷி தேவி அருள் பூரணமாய்ச் சேரும். வினைகளெல்லாம் தீர்ந்தொழியும். பாரில் உள்ள மக்கள் புகழும்படியான வாழ்வு வரும். அனைத்திலும் சிறந்த அழகு வரும். மேலான சிறந்த கல்வியும் உண்டாம்!! சங்கநிதி முதற்கொண்ட நிதிகள் தாமே வந்தடையும்!! இவையெல்லாவற்றுக்கும் மேலாக முக்தியும் உண்டாம்!!
ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை நிறைந்தது!
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment