ரத ஸப்தமி ஸ்பெஷல் !
ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் !
அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு
ஒளிதந்து இருள்நீக்கி
அருள் புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம்.