Monday, 28 December 2020

ஆதிரை பதிகம்

 ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !


 ஆதிரை பதிகம்


 திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.


மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.


இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.


"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்

போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே"


என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.


தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!


இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


பாடல் எண் : 01

முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே

வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்

அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.


பாடல் எண் : 02

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.


பாடல் எண் : 03

வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்

சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்

சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.


பாடல் எண் : 04

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்

பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்

வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்

அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும் படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.


பாடல் எண் : 05

நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்

கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து

அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.


பாடல் எண் : 06

விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்

தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்

எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு

அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.


பாடல் எண் : 07

செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்

இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்

அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.


பாடல் எண் : 08

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல

வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்ல

பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ

அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.


பாடல் எண் : 09

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்

இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்

அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும்.


பாடல் எண் : 10

பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்த

சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து

ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்

ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்.


பாடல் விளக்கம்:

உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.


தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!

இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

Sunday, 20 December 2020

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 16:


 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 16:


நூற்பயன் :


"அஞ்சுபுலனடக்கி யானென்பததற்றறிந்து

கஞ்சிநகர் வாழும் காமாக்ஷியம்மையிரு

கஞ்சமலர்ப்பதங்கள் கண்டு மனமகிழ்ந்து

தஞ்சமெனவருட்பாவை நிதம் பாடி

கொஞ்சுமடியார்க்குத் தேவியருள் சேரும்

பஞ்சவினை தீரும் பார்புகழும் வாழ்வுவரும்

மிஞ்சுமழகுவரும் மேலான கல்விவரும்

பஞ்சநிதி வருமே காணேலோர் எம்பாவாய்'


விளக்கம் :


ஐந்து புலன்களையுமடக்கி, நானெனும் அஹங்காரத்தை விட்டொழித்து, காஞ்சிபுரத்தில் வாழும் ஶ்ரீகாமாக்ஷியம்மை இரு தாளை மட்டுமே கண்டு மனம் நிறைந்து மகிழ்ந்து, தேவி பாதமே தஞ்சமெனும் உள்ளம் நினைந்து, காமாக்ஷியருட்பாவையை நிதம் பாடி, கொஞ்சுமடியார்க்குத் ஶ்ரீகாமாக்ஷி தேவி அருள் பூரணமாய்ச் சேரும். வினைகளெல்லாம் தீர்ந்தொழியும். பாரில் உள்ள மக்கள் புகழும்படியான வாழ்வு வரும். அனைத்திலும் சிறந்த அழகு வரும். மேலான சிறந்த கல்வியும் உண்டாம்!! சங்கநிதி முதற்கொண்ட நிதிகள் தாமே வந்தடையும்!! இவையெல்லாவற்றுக்கும் மேலாக முக்தியும் உண்டாம்!!


ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை நிறைந்தது!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:



"ஊருமே மெய்யல்ல உற்றாரும் மெய்யல்ல

பேருமே மெய்யல்ல பெண்டீரும் மெய்யல்ல

நீருமே மெய்யல்ல நும்மக்கள் மெய்யல்ல

பாருமே மெய்யல்ல பலநிதியும் மெய்யல்ல

கோரும் நிதிஈயும் கற்பகமே தஞ்சமென

சாரும் அடியார்க்குத் தாயாகி காமாக்ஷி

யாரும் அறியாது ஆண்டருளுந் தன்மையினால்

நேருஞ்சுகமொன்றே மெய்யேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


இவ்வுலகம் மெய்யல்ல!! ஸித்தாந்தங்களில் அத்விதீயம் என்பது உயர்ந்த ஸித்தாந்தம் என்பது ஶ்ரீசங்கரபகவத் பாதாள் காண்பித்த வழி!! அத்விதீயமான மோக்ஷத்தை அனுபவத்திற்குக் கொண்டு வரும் வழி சாக்த தந்த்ரங்களே!!


ப்ரஹ்மவித்யோபாஸனையினால் ஆத்மவிசாரம் செய்து, வாஸனாதிகளை தொலைத்து, ஞானமடைந்து, முக்தியடைவதென்பது அனைவர்க்குந் துர்லபம்!! 


அத்வைத மோக்ஷத்தை துல்யமாக அனுபவத்திற்கு கொண்டு வரும் வழியை சாக்த தந்த்ரங்கள் கூறுகின்றன. ஏனைய சமய உபாஸனைகள் த்வைத பாவத்தைக் கொண்டிருப்பினும், தசமஹாவித்யா தந்த்ரங்களாயினும் தக்ஷிணகாலி முதல் கமலாத்மிகா வரையிலும் அத்தனை குல உபாஸனையிலும் இறுதி நிலை அத்வைத முக்தியே!!


சாக்தத்தின் நிலை மூர்த்தி பேதத்தினை பொறுத்து மாறாது என்பது சாக்தத்தின் தனிச்சிறப்பு!! உபாஸிக்கும் மூர்த்தம் காமாக்ஷியாயினும், காளியாயினும், தூமாவதியாயினும், துர்கையாயினும், சின்னமஸ்தாவாயினும் இறுதி நிலை அத்தேவதையுடன் ஒன்றிவிடுவதே!!


ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமா முழுக்க முழுக்க அத்வைத நிலையைக் கூறுவதைக் காண்க!!


சாக்தத்திற்கும் அத்வைதத்திற்கும் ச்ருஷ்ட்டியில் வேறுபாடு உண்டே தவிர்த்து லயத்தில் வேறுபாடு இல்லை!! இறுதி நிலையை இரண்டும் ஒன்றாகவே கூறுகின்றது!!


ஶ்ரீகாமாக்ஷி தாஸர் அதையே இங்கு கூறுகின்றார்!!


இவ்வுலகில் அனைத்தும் மாயைத் திரையாலே மூடப்பெற்று விளங்குகின்றது. ப்ரஹ்மாதி மூர்த்தங்களும் மாயையினாலே ச்ருஷ்ட்யாதி கார்யங்களைச் செய்கின்றனர் எனில் அவர்களும் நிலையில்லாதவர்களே!!


மாயையால் பொய்யானதால், இவ்வுலகம் மெய்யல்ல!! பொய்யே!!


உற்றாரும் மெய்யல்ல!! பொய்யே!! கணந்தோறும் மாறக்கூடிய உலகில் சொந்தங்களும் மாறுகின்றன அல்லவா!!


பேருமே மெய்யல்ல!! இறந்த பின்னர் இப்பெயரும் அழகிறது அல்லவா!!? பேரும் பொய்யே!!


பெண்டீரும் மெய்யல்ல!! கணவன் மனைவி எனும் பந்தமும் இறப்பு வரையே!! அதன் பின் அதுவும் பொய்யே!!


நாமும் மெய்யல்ல!! இவ்வடலாயினும், மனதாயினும் அனைத்தும் அழிந்துவிடுவதால் நாமும் மெய்யல்ல!! பொய்யே!!


நமது குழந்தைகளும் இந்த பிறவியுடன் தொடர்பு முறிந்துவிடுவதால் அவர்களும் மெய்யல்ல!! பொய்யே!!


இவ்வுலகும் மெய்யல்ல!! செல்வங்களனைத்தும் மெய்யல்ல!! பொய்யே!!


பின்.எது மெய்!!?


கேட்கக்கூடிய அனைத்தும் அளித்து காஞ்சிநகர் வாழும் காமக்கோட்டமுறையும் கற்பகவல்லியாம் ஶ்ரீகாமாக்ஷி பராம்பாளின் திருவடியே தஞ்சம் தஞ்சமென்று வேதங்கள் அம்பாளின் பாதத்தில் விழுந்ததைப் போல

"துர்காந் தேவீஹும் சரணமஹம் ப்ரபத்யே!" என்றும் "தாம் பத்மினீம் ஈம் சரணமஹம் ப்ரபத்யே!" என்று காமாக்ஷி பாதத்தினை சரணமடையும் பக்தருக்கு தானே தாயாகி விளங்குவாள் அம்பாள்.


அங்ஙனம் ஶ்ரீமாதாவான பராசக்தி பேதித்து நமை வளர்த்தெடுக்கும் பெய்வளையாகி, நம் ஆணவாதி மலங்களையெல்லாம் ஒழித்து, நம்மை சுத்தனாக்கிப், பின் முக்தனாக்கி, ஜீவன் முக்தியையும் வழங்கி அருள்கிறாள். அத்தகைய கருணையுடன் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அளிக்கும் முக்தியொன்றே மெய் என்பதை உணர்வீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 14:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 14:



"பெருங்காரியம் போல் பிறந்தீர் உலகில்

 அருங்காரியம் நீர் புரிந்ததென்ன சொல்வீர்

குரங்காய்ப பிறந்தீர் கிடந்தீர் தவழ்ந்தீர்

பெருங்காண் நடந்தீர் தளர்ந்து பிணமானீர்

ஒருங்கே வருவீர் நீர் உய்யும் வகை கேளீர்

சிரங்கை குவித்தம்மை சீர் பாடித் தாளை

நெருங்கி மலர் தூவி நித்த நிலை நாடி

இருங்கோள அருள்வருமே தாலேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"ஏதோ சாதித்து விட்டதைப் போல இவ்வுலகிலே பிறந்தோம்!! உலகிலே பிறந்து நாம் செய்த சிறந்த காரியம் என்ன!!?


பிறந்தோம், தவழ்ந்தோம், வளர்ந்தோம், படித்தோம், மணந்தோம், பிள்ளை பெற்றோம், பின் அவற்றை வளர்த்தோம், இறுதியில் மாண்டோம்!!


விலங்கினங்களும், பறவைகளும் கூட இக்காரியத்தைச் செய்கின்றனவே!! இவைகளுக்கு மாறாக நாம் மனிதராய்ப் பிறந்து இவ்வுலகில் சாதித்தது என்ன!!?


வாணாள் முழுதும் வீணாகியே போகிறதல்லவா!!? இவ்வாழ்நாளை பயனுறும்படி செய்ய வழியொன்று உண்டாகில், அது ஜகதம்பிகையாகிய பராசக்தி காமாக்ஷியைக் கண்டு வணங்குவதேயாம்!!


தேவியின்.ஆலயமாம் காஞ்சிப்பதிக்குச் சென்று, ஶ்ரீராஜராஜேச்வரியான பகவதி காமேச்வரியை, தலையின் மேல் கைகுவித்து,


அம்மையின பெருமை தனைப் பாடிப் புகழ்ந்து, இருதிருவடிகளை வணங்கி, அம்பாள் பாதத்திலே மலரைத் தூவி, முக்தி நிலையைப் பாடி,


அவளின் திருவடியிணையை மறவாதிருந்தால் முக்தியும் கைமேலாம் என்பநை உணரவீராக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:



"தாய்க்குச் சுமையாய் தலைகீழாய் வந்துதித்து

பாய்க்குட்கிடந்தழுது பாழுலகிலே வளர்ந்து

ஏய்க்குந்திறனறிந்து எப்பொருளும் தான் கவர்ந்து

பேய்க்கு நிகராகும் பேர்களிடேயே சொரிந்து

நாய்க்குங் கடையாகி நாடு நாடாய் அலைந்து

நோய்க்கே இரையாகும் பொய்வாழ்வு தாயேயுன்

சேய்க்கு வரலாமோ வாராது காத்தருள்வாய்

தாய்க்கும் பெருந்தாயாய் வந்தேலோர் எம்பாவாய்"


விளக்கம் :


"பூமியில் பிறக்கும் பொழுது கொடுமையான வேதனையை தாயாருக்கு அளித்துக்கொண்டே தலைகீழாகவே பூமியில்  பிறந்து,


பாயில் கிடந்து, பல சேஷ்டைகளைச் செய்து அழுது, பாழான இவ்வுலகிலே வளர்ந்து,


அடுத்தவரை ஏய்க்கும் திறனைக் கண்டு அறிந்து, பொருளீட்டுவதற்காக பல மாறுபாடுள்ள தவறான வழிகளையும் கொண்டு,


பேய்க்குச் சமமான மக்களுடன் வீணே பழகி, நல்லோரைப் போல் நடமிடும் தீயோரைக் கண்டு, மயங்கி, அவர் பின்னே சென்று, மீறாத் துயருற்று,


நாயை விடவும் கடையனாகி, ஊர்கள் தோறும் அலைந்து, வருந்திப்


பின் பாழான நோய் ஏற்பட்டு, இவ்வாழ்வு நோயினாலே கரையும் வண்ணம் துக்கமும் ஏற்ப்பட்டு, அதன் விளைவாய் மரணமும் தோன்றும் படி


இத்தகைய துயரமும், பராசக்தியான அம்பிகையே, இத்தகைய பொய் வாழ்வு உன் அடியார்களுக்கு வரலாமா!!?


உன் பிள்ளைகளான எங்களை இத்தகைய கொடுமையான பொய்வாழ்வு வாராமல் காத்தருள்வாய் அம்மா!!


தாய்க்கெல்லாம தாயாய் விளங்கும் பெருந்தாயே!! தயாபரியே!! உமையே!!


தாயினும் நல்லாள் என்பது அம்பிகை நாமம்!!! ஸஹஸ்ரநாமமும் அம்பாளை ஶ்ரீமாதா எனக்கூறுவதைக் காண்க!!


மேலும் அயி, விதாத்ரி, ப்ரஸவித்ரி, அம்பா, அம்பிகா, ஜனனி, மாதா என மறுபடி மறுபடி கூறுவதைக் காண்க!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:



"பொருள் நிறைவோ தேட இங்கு புறப்பட்டு வந்தீர்

அருநிறைவைத் தேடவோ அங்கிருந்து வந்தீர்

இருநிறையும் ஏழையரே உய்யும் வகை கேளீர்

கருணைவடிவாகியொரு காஞ்சியெனும் ஊரில்

அருணர் சதகோடி என ஜோதியொளி வீசும்

சரணுடைய தாயொருத்தி தஞ்சமென்றோர்க்குத்

அருநிறைவும் ஆங்கே பொருநிறைவும் சேர்த்து

தருமணியாய் காத்துள்ளாள காணேலோரெம்பாவாய்"


விளக்கம் :


"யத்ராஸ்தி போக நச தத்ர மோக்ஷ:

யத்ராஸ்தி மோக்ஷ நச தத்ர போக:

ஶ்ரீஸுந்தரி ஸாதக புங்கவானாம் போகஸ்ச மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ!!"


என்பது தந்த்ர வசனம்!! அம்பாளை உபாஸிக்கும் பக்தர்க்கு அருளும் பொருளும் நிறைந்தே கிடைக்கும் என்பது அவள் கருணை!!


பொருள் நிறைவைத் தேடி அம்பிகைத் தொழுபவர் பலர் உண்டு!! ஶ்ரீமதாச்சார்யாளும் அம்பாளைக் கூறும் போது, அஞ்ஞானத்தை ஒழிப்பவள், கல்வியறிவை அளிப்பவள், என்றெல்லாம் கூறிவிட்டுப் பின்னரே முக்தியை அளிப்பவள் அம்பாள் என்கிறார்!!


போகாதிகளை அளித்து, வாழ்வில் நிறைவளித்துப் பின் முக்தியளிப்பவள் ஶ்ரீபராசக்தி!!


அது போல் பொருளை வேண்டினும், பொருட்செல்வம் அளிப்பாள். அருளை வேண்டினும் அருட்செல்வத்தையும் அளித்தருள்வாள் அம்மை!!


அஞ்ஞானம் எனும் இருளால் மூடப்பெற்று விளங்கும் நம்மை விழாமல் காத்தருள்பவள் அன்னை பராசக்தி. நாம் உய்யும் வகை என்னவெனில்,


கஞ்சிநகர் தனிலே, காமபீடத்திலே, கருணை வடிவாகியமர்ந்து, ஆயிரம் கோடி சூரியன்களைப் போல ஒளி பொருந்திய திருமேனியை உடைய ஜகன்மாதாவை சரணமடைவது தான்!!


அப்படி சரணமடைந்தவருக்கு, தாயாய் விளங்கும் பராசக்தி தஞ்சமென்றடைந்தோருக்கு அருள் நிறைவை வழங்கி அருள்பவள்!!


தண்ணருளை பூரணமாய் வழங்கியருள் தயாபரியான அம்பிகை, கீழான பொருட்செல்வத்தை நாம் விரும்பினும் அதையும் அளித்தருளும் பூரணி தயாபரி!! 


இவ்விரண்டையும் அளிக்கும் கருணையுள்ளத்தோடு கஞ்சிநகரில் காமபீடத்திலே ஜகன்மாதா காத்திருக்கிறாள் தன்.குழந்தைகள் தன்னிடத்திலே வந்து சேர்வதற்காக!!


அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி அமபாளை ஸதா ஸ்மரிப்போமாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:



"வாணாட்சி காணண்னை மன்னுலகில் லீலையாய்

காணாட்சி செய்யும் அரியாசனத்தில் அமர்ந்து

தானாட்சி செய்யும் தென்மதுரை மாநகரில்

மீனாட்சியாய் வந்த மாதா மனோன்மணியை

தானாட்சி செய்தும்மை பாழ்நரகில் வீழ்த்திடும்

ஊனாட்சி செய்யுமமது உள்ளத்தில் வைத்திட்டு

யானாட்சி செய்து மல ஆணவம் நீத்தீரேல்

வாண்ட்சி காணலாம் என்றேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"ஶ்ரீமந்நகர நாயிகையான பராசக்தி அனேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனி!! ஶ்ரீபுர மத்யத்தில் விளங்கும் காமலோசனாம்பாள், உலகங்களையெல்லாம் பரிபாலிக்கும் வண்ணம் ப்ரஹ்மாண்டங்களுக்கு மத்தியில் விளங்கும் மஹாமேருவின் உச்சியிலும் விளங்கி நிற்பாள். ஆதிசக்தியான ஶ்ரீகாமாக்ஷி தேவி உயிர்களிடத்து அபிமானம் கொண்டு கரும்புவில்லும், மலர்க்கணையும் ஏந்தி மலயத்வஜபாண்டியனுக்கு மூன்று வயது மகவாய் அயோநிஜையாகத் தோன்றினாள்!!


மலயத்வஜனுக்கு மகவாய் அவதரிக்கும் முன்பே ஶ்ரீமீநாக்ஷி தேவியை இந்த்ரன் மரகத ரத்னத்தாலான சிலாரூபமாக ப்ரதிஷ்டித்துவிட்டதாக புராணங்கள் கூறும்!! ஆயினும் த்ரிபுரஸுந்தரியான ஶ்ரீமீநாக்ஷி மீள மலயத்வஜனுக்கு மகவாய்த் தோன்றி நின்றாள்!!


வாணாட்சியை விட்டுவிட்டு, ஶ்ரீகாமாக்ஷி தேவி மண்ணுலகை ஆட்சி செய்ய ஶ்ரீமீநாக்ஷியாய்த் தோன்றினாள். பாண்டிய வம்சத்து அரியணையில் அமர்ந்து, பாண்டிய குலத்திற்கே நீங்காத புகழளித்தாள். ஶ்ரீசக்ரத்தின் வடிவில் விளங்கும் தென்மதுராபுரியிலே ஶ்ரீபுரத்தில் ஜ்வலிப்பது போலே அம்பாள் அரசாட்சி செய்தாள்.


அவ்வாறு விளங்கிய தேவி "மஹா மனோன்மனி" பீடமாம் மதுரையில் ஶ்ரீசக்ர பிந்துவில் கொலுவீற்றிருந்து அருள்கிறாள்.


அப்படி மீநாக்ஷியாய் விளங்கும் காமாக்ஷியை, பஞ்சேந்த்ரியங்களாலும் அல்லலுற்று புலன்கள் இழுக்கும் வழியில் சென்று மீளாத் துயரை அடைந்து விடாமல், ஹ்ருதயத்தாமரையிலே என்றும் அவளை வைத்து பூஜிப்பீர்களாக!!


ஶ்ரீமீனலோசனையான அம்பாள் கொலுவீற்றிருந்து அருளும் ஹ்ருதயத்திலே பாபங்கள் நெருங்காது!! ஆணவாதி மலங்கள் அழிந்து படும்!! ஆதிசக்தியான இவள் வடிவை த்யானித்த பொழுதில் முக்தியும் சித்திக்கும்!!


அப்படி முக்தியடைந்து இன்புறுவீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...